3 மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு முகாம்; மாற்று திறனாளிகளின் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
பெரம்பலூர், ஜூலை 24: பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் அறிவுறுத்தினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (23ம் தேதி) நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாவட்டக் கலெக்டர் தலைமையில், 3 மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்புமுகாமில் மாவட்ட கலெக்டர் மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். இதில் பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு ஊரக பகுதிகளில், நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் பணிகள் வழங்கிட வேண்டும், அதற்கான முழு பணித் தொகையும் வழங்கிடவும், இலவச வீட்டு மனைப் பட்டா, தொழிற் கடனுதவிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கை தொடர்பாக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தினார்.. பின்னர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 31 மனுக்கள் பெற்றுக்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப் பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று 4 பயனாளிகளுக்கு தலா ரூ.3,500 மதிப்பீட்டில் காதொலி கருவிகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.16,199 மதிப்பீட்டில் திறன் பேசிகளையும் என மொத்தம் 6 கண்பார்வை குறைபாடுடைய மற்றும் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.49,898 மதிப்பிலான உபகரணங்களை மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.
மேலும் கடந்த 22ம் தேதி முதல் நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வெல்ல வேண்டும் என மாவட்டக் கலெக்டர் மாற்றுத் திறனாளிகளிடம் அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் மாவட்டக் கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தாட்கோ மேலாளர் கவியரசு, தேசிய சுகாதாரக் குழுமம் உதவி திட்ட அலுவலர் டாக்டர் விவேகானந்தன், உதவி திட்ட மேலாளர் (மகளிர் திட்டம்) கிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.