ரூ.125.80 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
நாமக்கல், ஜூலை 26: நாமக்கல் மாவட்டத்தில் ரூ.125 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆசியா மரியம், நாமக்கல் மாநகராட்சி வார்டு 8 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் சிறப்பு சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.70.70 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி மற்றும் பெரியபட்டியில் ரூ.57.50 லட்சம் மதிப்பில் திட்டக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மைய கட்டுமானப் பணிகளை நேற்று நேரில் பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சியில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.118.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணி, புதுச்சத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும். புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.125.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவதை அவர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.