நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை ஏலம் துவக்கம்
நாமக்கல், ஜூலை 25: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் துவங்கியது. நாமக்கல், துறையூர், சேந்தமங்கலம் ஆகிய ஊர்களை சேர்ந்த விவசாயிகள் 16 மூட்டைகளில் 575 கிலோ கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். நாமக்கல், கொடுமுடி, ஆண்டாபுரம் போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள், விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் ஒரு கிலோ கொப்பரை குறைந்தபட்சம் ரூ.227 முதல். அதிகபட்சம் ரூ.241 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.1.35 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனது.
இதுகுறித்து சங்க அலுவலர்கள் கூறுகையில், ‘விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த வாரம் முதல் சங்கத்தில் கொப்பரை ஏலம் துவங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இணைப்பதிவாளர் அறிவுரை படி இந்த ஏலம் நடத்தப்பட்டு, உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. கொப்பரை வைத்துள்ள விவசாயிகள், சங்கத்திற்கு கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்று விற்ற பயன்பெறலாம். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெறும்,’ என்றனர்.