மதுரையில் பரபரப்பு ரூ.3.74 கோடி ஹவாலா பணம், கார் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை
மதுரை ஜூலை 24: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாகன நிறுத்தத்தில், சட்டவிரோதமாக ஒரு கும்பல் ஹவாலா பணத்தை காரில் வைத்து கை மாற்றுவதாக விளக்குத்தூண் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் பணத்தை கைமாற்றும் வேலையில் இருந்த பாபுராவ் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப்பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ரூ.3.74 கோடி ஹவாலா பணத்துடன், காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாபுராவ் உள்ளிட்ட ஐந்து பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில், அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில் முழுமையான தகவல்கள் தெரியவரும் என போலீசார் கூறினர்.