கரூர் மாவட்ட விவசாய விஞ்ஞானிகளுக்கு ஊக்கப்பரிசு
கரூர், ஜூலை. 25: கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2025- 26ம் நிதியாண்டில் விவசாயிகள், அனுபவ அறிவின் அடிப்படையில் தாங்களாகவே புதிய சாகுபடி முறைகள், இடுபொருட்களை பயன்படுத்துதல், வேளாண் கருவிகளை உருவாக்கி பயன்படுத்துதல் போன்றவற்றின் வாயிலாக வேளாண் உற்பத்தியை அதிகரிக்கின்றனர்.
இதுபோன்ற விவசாயி விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில், பரிசு வழங்கப்படவுள்ளது. புதிய வேளாண் கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவோர் புதிய சாகுபடி முறைகளை பயன்படுத்துவோர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் பதிவு செய்யலாம். விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், கிராம, நகர்ப்புற இளைஞர்கள் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணம் ரூ. 150 உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து விண்ணப்பத்தை வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சம், 2ம் பரிசாக ரூ.1.5 லட்சம், 3ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மாவட்ட அளவில் குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.