கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புனிதபயணம் செல்ல நிதி உதவி
கருர், ஜூலை. 24:.இது குறித்து கருர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூ.12 இலட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்ததிட்டத்தின கீழ் பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்புனித பயணம் புத்தமத தொடர்புடைய பீகாரில் உள்ள புத்த கயா, உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர், வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில், பீகாரில் உள்ள ராஜ்கிர், வைஷாலி, நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற புனித தலங்களையும், சமணமத தொடர்புடைய இராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமணகோவில், ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி குஜராத்தில் உள்ள பாலிடனா, பீகாரில் உள்ள பவபுரி சமண கோயில் போன்ற இடங்கள், கர்நாடகாவில் சரவணபெலகோலா போன்ற புனித தலங்களையும் மற்றும் சீக்கிய மத தொடர்புடைய பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் கேசகர் சாகிப், தக்ட் டாம்டமா சாகிப், பீகாரில் உள்ள தக்ட் ஹர்மந்திர் சாகிப் (குருகோவிந்த் சிங்), தக்ட் ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா நான்காணா சாகிப், குருத்வாரா சச்சா சௌதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா தெஹ்ரா சாகிப் போன்ற புனித தலங்களையும் உள்ளடக்கியது.
இத்திட்டத்தின் கீழ் 01.07.2025க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி - ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. கரூர் மாவட்டத்தை சேர்ந்த புத்த, சமண மற்றும் சீக்கியர் மதத்தினர்கள் புனித பயணம் மேற்கொள்ள மேற்காணும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனபெறலாம்.