செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் சேதமடைந்த சாலை சீரமைப்பு
காஞ்சிபுரம், ஜூலை 30: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அருகே உள்ள பாலாறு மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையின்படி, பாலாறு மேம்பாலத்தில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். காஞ்சிபுரத்தைத் தொட்டுச் செல்லும் பாலாற்றில், களக்காட்டூர், உத்தரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு ஓரிக்கை கீழ் சாலை, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு செவிலிமேடு மேல் சாலை ஆகிய இரண்டு பகுதிகளில் தலா 1 கி.மீ., நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேல் சாலை வழியாக அதாவது செய்யாறு, வந்தவாசி சாலை மிகவும் பிரதான சாலையாக அமைந்துள்ளது. இந்த, சாலை வழியாக செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திருச்சி, சேலம், ராமேஸ்வரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் ஏராளமான கனரக வாகனங்கள், வாகனங்கள் இந்த பாலம் வழியாக கடந்து செல்கின்றன. மேலும், புஞ்சையரசன்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி, மாமண்டூர், நத்தக்கொல்லை, பல்லாவரம், அய்யங்கார்குளம், வெம்பாக்கம், கோளிவாக்கம் கூழமந்தல், ஆக்கூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள் ஆகிய அனைவரும் மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கும் காஞ்சிபுரத்தை நம்பியே உள்ளதால், அதிகளவில் டூ வீலர்களில் வந்து செல்கின்றனர்.
மேலும், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாங்கால் கூட்டு சாலையில் சிப்காட் அமைந்துள்ளது. இங்கு, அதிகளவில் பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த, தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிகளவில் இந்த சாலை வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில், பாலத்தின் இணைப்பு பகுதிகளில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, பள்ளம் ஏற்பட்டு அச்சுறுத்தும் வகையில் இரும்புக் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. இதனால், வாகனங்கள் சேதம் அடைவதுடன், டூவீலரில் செல்வோர் அச்சத்துடனே இந்த பாலத்தை கடந்து சென்றனர். இதுகுறித்து, தொடர்ந்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று சேதமடைந்த சுமார் 1 கி.மீ., நீளமுள்ள பாலத்தில் தார்சாலை அமைக்கப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.