அஞ்சல் சேவைகள் சம்பந்தமான விற்பனை நிலையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: தபால் நிலைய கண்காணிப்பாளர் தகவல்
காஞ்சிபுரம், ஆக. 1: காஞ்சிபுரம் தலைமை தபால் நிலைய கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாாவது: அஞ்சல் சேவையை விரிவுபடுத்தவும், வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்தவும், புதுப்பிக்கப்பட்ட உரிமையாளர் விற்பனை நிலையங்களை திறக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள், அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்களை அஞ்சல் துறை வரவேற்கிறது. தபால் தலைகள் விற்பனை, துரித அஞ்சல் முன்பதிவு, பதிவு அஞ்சல் முன்பதிவு, பண விடைகள் மற்றும் சில்லறை சேவைகள் உள்ளிட்ட பல அஞ்சல் சேவைகளை உரிமையாளர் விற்பனை நிலையங்கள் வழங்கும். குறிப்பாக, துறைசார்ந்த தபால் நிலையங்கள் இல்லாத பகுதிகளில் அஞ்சல் வசதிகளை அனைவருக்கும் வழங்குவதை நோக்கமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகுதிகளை பொருத்தவரை பொருத்தமான வளாகங்களைக் கொண்ட இந்தியக் குடிமக்கள் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் துறை சார்ந்த அடிப்படை அறிவு உடையோர் மற்றும் தேவையான உள்கட்டமைப்புடன் முதலீடு செய்ய விருப்பம் உடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் முறையாக நிரப்பிய தங்களது விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட அஞ்சல் அதிகாரிக்கு சமர்ப்பிக்கலாம். விரிவான வழிகாட்டுதல்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள அஞ்சல் கோட்டங்களில் கிடைக்கின்றன. மேலும், https://utiilties. cept.gov.in/DOP/ViewUploads. aspx?.uid=10 என்ற அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடுத்த மாதம் ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் அருள்தாஸ், காஞ்சிபுரம் கோட்டம், காஞ்சிபுரம்-631501 என்ற முகவரிலிலும், 044-2722 2901 என்ற தொலைபேசி எண்ணில் விவரங்கள் பெறலாம். மேலும், dokanchipuram@indiapost. Gov.in இ.மெயில் மூலம் தகவல்கள் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.