சங்கராபுரம் அருகே பரிதாபம் ஊஞ்சல் சேலை கழுத்தில் இறுகி 10ம் வகுப்பு மாணவி சாவு
சங்கராபுரம், ஆக. 1: சங்கராபுரம் அருகே ஊஞ்சலில் விளயைாடியபோது கழுத்தில் சேலை இறுகி 10ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த காசிவேல் மகள் தன்சிகா (15). இவர் அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை காசிவேல் சவுதியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி தன்சிகா விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை கழுத்தில் இறுகி மயக்கமடைந்தார். இதை பார்த்த அவரது அக்கா ஹர்சிகா(18) கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் தன்சிகாவை மீட்டு சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த் மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சங்கராபுரம் போலீசில் தன்சிகாவின் தாயார் சாந்தி அளித்த புகாரின் பேரில் காவல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிவு செய்து, தன்சிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். ஊஞ்சலில் விளையாடியபோது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.