பண்ருட்டி அருகே திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
பண்ருட்டி, ஆக. 1: பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் எதிரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு இருந்தது. இந்த பயணியர் நிழற்குடையில் ஊர் பெயர் எழுதுவதில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பேர் பெரியான்குப்பம் பயணியர் நிழற்குடை என எழுதி இருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த முத்தாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது போக்குவரத்து பாதித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்றனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பின் வரும் 7ம் தேதி கடலூர் ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தேர்வு மேற்கொள்வது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இரவு 9 மணி அளவில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது