ஆடிப்பெருக்கு, வார இறுதியை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
கோவை, ஜூலை 31: கோவையில் ஆடிப்பெருக்கு, வாரயிறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை நாளையும் (1ம் தேதி), 2ம் தேதி சனிக்கிழமையும், 3ம் தேதி ஆடிப்பெருக்கும் வருகிறது. இந்த நாட்களில் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு அதிகளவிலான பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, கோவையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை முதல் வரும் 3-ம் தேதி வரை கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதிகளுக்கும், சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மேலும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு 3-ம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூர், ஈஷா, பூண்டி வெள்ளிங்கிரி, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோயில் மற்றும் பொள்ளாச்சிக்கு கூடுதலாக 15 பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.