கோவை மாஸ்டர் பிளான் வெளியீடு; ரியல் எஸ்ேடட் கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் பாராட்டு
கோவை, ஜூலை 28: கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நேற்று நடந்தது. இதில் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி, தேசிய செயல் தலைவர் லயன் செந்தில்குமார், துணை செயலாளர் பால சண்முகம், துணை தலைவர் முரளிதரன், மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், வில்சன் தாமஸ், மாநில தகவல் ஆணையர் பிரியகுமார், மாவட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் முகமது ஜியாவுதீன், லயன்ஸ் பன்னாட்டு சங்க துணை ஆளுநர் செல்வராஜ், கூட்டமைப்பின் தேசிய செயற்குழு தலைவர் வினோத் சிங் ரத்தோர், இணை செயலாளர் பாலசுப்ரமணி, லே அவுட் ஓனர் குழு துணை தலைவர் தியாகராஜன், ஆலோசனை குழு உறுப்பினர் நிவாஸ், கிருஷ்ணமூர்த்தி, ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் முழுமை திட்டம் உள்பட பல்வேறு முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு பாராட்டு விழா, சிறந்த ரியல் எஸ்டேட் தொழில் முனைவோருக்கு விருது, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல் மற்றும் கோரிக்கை மாநாடு நடத்தப்பட்டது. இந்த விழாவில் கோவை மாஸ்டர் பிளானில் வரும் 2041ம் ஆண்டிற்கு 33 சதவீத பசுமை பரப்பை அடைவது முக்கிய கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மண்டல இணைப்புகளை மேம்படுத்துதல், சமூக மற்றும் பொருளாதார உத்திகளை வலுப்படுத்துதல், உள் கட்டமைப்பு, வீட்டு வசதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்தல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்றவற்றை முக்கிய அம்சமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக முதல்வர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர், டிடிசிபிக்கு இந்த கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நடப்பு திட்டங்கள் டிடிசிபி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து உத்தரவு பெறும் தருவாயில் உள்ளது. இதற்கெல்லாம் எந்த வகையிலும் இடையூறும் பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய முழுமை திட்டத்தில் இருந்து விலக்கு தர வேண்டும்.தற்போதைய முழுமை திட்டத்தில் உள்ள நில வகைபாடுகளை அப்பகுதி மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் கோவை முழுமை திட்டம் 2041 உடன் இணைத்து ஒரு துணை திட்டம் தயாரித்து வெளியிட வேண்டும்.
மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் எல்லைகளை வரையறை செய்து, ரியல் எஸ்டேட் அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையின்மை சான்று வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மாநகராட்சி பகுதிக்குட்பட்ட நகர நில அளவை பதிவேடுகளை உட்பிரிவு செய்து பட்டா வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை களைந்து விரைவில் கணினி பட்டாவை தானியங்கி முறையில் வழங்க வேண்டும். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்வதில் ஏற்படுகின்ற கால நேர தாமதம் மற்றும் வீண் விரயங்கள், சிரமங்களை தவிர்த்தும், எளிமையான முறையில் பதிவு செய்து விரைவில் உத்தரவு பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.