புதிய தொழில்நுட்பம் 2.0 செயல்படுத்தும் வகையில் சென்னையில் 2, 3ம் தேதிகளில் தபால் சேவை கிடையாது : அஞ்சல்துறை தலைவர் தகவல்
சென்னை, ஜூலை 31: புதிய தொழில்நுட்பம் 2.0 செயல்படுத்தும் வகையில் வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னையில் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படாது, என்று அஞ்சல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 வரும் 4ம் தேதி முதல் சென்னை நகர மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி, நாட்டின் வளர்ச்சிக்கு துணை செய்வதாக அமையும். இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை, தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வரும் 2ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 3ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அன்று பரிவர்த்தனைகள் இல்லா நாளாக திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, வரும் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி சென்னை நகர மண்டலத்தில் உள்ள சென்னை பொது அஞ்சலகம், அண்ணா சாலை அஞ்சலகம், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, தாம்பரம், திருவண்ணாமலை, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, சென்னை மத்திய கோட்டங்களில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படாது. புதிய தொழில்நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்கு இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தவிர்க்க முடியாத இரண்டு நாள் சேவை இல்லாத நாள், அனைத்து மக்களுக்கும் மிகச் சிறந்த துரித டிஜிட்டல் சேவைகளை பெற வழிவகுக்க எடுக்கபட்டது. ஆகவே, பொது மக்கள் இந்த சேவை இல்லா நாட்களை கணக்கில் கொண்டு, தங்களுடைய அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த சேவை இல்லாத நாட்களில் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.