ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன்கடை அங்கன்வாடி, தார் சாலை அமைத்தல் பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
ஜெயங்கொண்டம், ஜூலை 26: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை, அங்கன்வாடி கட்டிடம், தார் சாலை பணிகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் ஒன்றியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-26ன் கீழ், வங்குடி ஊராட்சியில்,
ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில், சித்தேரி ஆதி திராவிடர் மயானம் செல்லும் சாலையில் தார்சாலை அமைத்தல், காட்டகரம் ஊராட்சியில், ரூ. 16.65 லட்சம் மதிப்பீட்டில், கைலாசபுரம் கிராமத்தில், புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், கங்கைகொண்டசோழபுரத்தில், ரூ. 13.30 லட்சம் மதிப்பீட்டில், நியாயவிலைக் கடை புதிய கட்டிடம் கட்டுதல், ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க செயலாளர் செல்வக்குமார், ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் மணிமாறன், ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமராஜன், செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.