மேட்டூர் கால்வாய் பகுதியில் சிக்கிய நாய்களை மீட்கும் முயற்சி தோல்வி: நீரோட்டம் அதிகமானதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்
இந்நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 70,000கன அடியாக குறைந்தது. இதனால், உபரி நீர் கால்வாயில் திறக்கும் நீரின் அளவு விநாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் திறப்பின் அளவு குறைந்ததால் நேற்று மதியம் மண் திட்டில் சிக்கியுள்ள 5 நாய்களை மீட்க, மேட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஒரு திட்டில் ஒரு நாய் மட்டுமே இருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தேடி பார்த்தபோது, அந்த நாயை காணவில்லை. நீர் குறைவாக செல்வதால், அந்த நாய் நீந்தி கரை சேர்ந்திருக்கும் என தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர். மற்ற 4 நாய்கள் இருக்கும் பகுதியில், நீரோட்டம் வேகமாக இருப்பதால், அதனை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தீயணைப்புதுறை வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையடுத்து அந்த 4 நாய்களுக்கும் ட்ரோன் உதவியுடன் உணவு வழங்கப்பட்டது. நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டால் மட்டுமே, அந்த நாய்களை அங்கிருந்து மீட்க முடியும் என, மேட்டூர் தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்.