காய்கறி, பழம் பயிர்களை தாக்கும் மாவுப்பூச்சிகள்
சிவகாசி, செப்.30: மாவுப்பூச்சி தாக்குதலின் கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் விளக்கமளித்துள்ளனர். காய்கறி மற்றும் பழப்பயிர்கள் உற்பத்தியில் பெரும் சவாலாக இருப்பது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஆகும். சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், அசுவினி தத்துப்பூச்சி, வெள்ளை ஈ மற்றும் மாவுப்பூச்சி போன்றவை பயிர்களை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதில் மாவுப்பூச்சி அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. தோட்டக்கலை பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகளவு உள்ளது. இதனால் இப்பயிர்கள் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. தட்ப வெப்பநிலை மாற்றம் காரணமாக மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகரித்துள்ளது. பயிர்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாக மாறி பின் செடிகள் வாடி விடுகின்றன. இந்த மாவுப்பூச்சி ஒரு செடியில் இருந்து மற்ற செடிகளுக்கு எளிதில் பரவி விடுகிறது.
இதனை அழிக்க மிகவும் பாதிக்கப்பட்ட பயிர்களில் இருந்து செடிகளைப் பிடுங்கி எடுத்து எரித்து அழித்துவிட வேண்டும். 3% வேப்ப எண்ணெய்யை 25 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மெட்டாரைசியம் அல்லது பெவேரியா பேசியானா 5 கிராம் 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும் நேரங்களில் புரோபெனோபாஸ் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் அல்லது தையோமீதாக்சாம் 0.5 மில்லி மற்றும் ஒட்டும் திரவம் 0.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.