டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி சாவு
சாத்தூர், செப்.17: சாத்தூர் அருகே டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புது சூரங்குடியை சேர்ந்தவர் மேசையா(30). இவர் தனத மனைவி வனிதா(24), மகள் சஞ்சனா(3) ஆகியோருடன் டூவீலரில் நேற்று முன்தினம் சாத்தூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு நான்கு வழிச்சாலையில் சென்றார்.
பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே சென்றபோது மதுரையில் இருந்து திருநெல்வேலி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் வனிதா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மேசையா, சஞ்சனா 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.