விருதுநகரில் மக்கள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், செப்.9: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் சுகபுத்ரா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை தொடர்பான மனுக்களைப் பெற்றுக்கொண்டார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, ரேசன் கார்டு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைப் பெற்றார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில், டிஆர்ஓ ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, நேர்முக உதவியாளர் பிர்தௌஸ் பாத்திமா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.