ஏஐடியுசி ஒர்க்கர்ஸ் யூனியன் பேரவை
விருதுநகர், ஆக.7: விருதுநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி ஒர்க்கர்ஸ் யூனியன் சங்க 15வது ஆண்டு பேரவை மத்திய சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, முன்னாள் எம்பி அழகிரிசாமி, முன்னாள் எம்எல்ஏ பொன்னுபாண்டியன், மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், சென்னையில் மின்சார பேருந்து இயக்கம்என்ற அடிப்படையில் 3 பணிமனைகளை தனியார் மயமாக்குவதை தடுத்திட வேண்டும். ஒப்பந்த பணி நியமனத்தை கைவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும். அனைத்துகாலிப்பணியிடங்களையும் கல்வித்தகுதி அடிப்படையில் நிரப்ப வேண்டும். வாரிசு பணி வழங்கிட வேண்டும். 2023 ஜூலை முதல் ஓய்வு பெற்றோருக்கான 24 மாத பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளில் அனைத்து பணப்பலன்களை வழங்க வேண்டும். தமிழ்நாடு என பெயர் மாற்ற 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் நினைவாக அனைத்து பேருந்துகளிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.