மாட்டுவண்டி பந்தயத்தில் 113 ஜோடி மாடுகள் பங்கேற்பு
தேவகோட்டை, நவ.6: தேவகோட்டை அருகே பனையூர் கிராமத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பனையூர்-தேவகோட்டை சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. முதலாவதாக 2 சுற்றுகளாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 30 ஜோடிகளும், 4 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 83 ஜோடிகள் என மொத்தம் 113 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர்.
விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியினை பருத்தியூர், புளியால், தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கைதட்டி உற்சாகமாக கண்டுகளித்தனர்.