சாத்தூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாத்தூர், ஆக.2: சாத்தூர் ரயில் நிலையத்தில் காவல் உதவி செயலி குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் நகர் காவல்நிலைய எல்லைப்பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட், வங்கி உள்ளிட்ட இடங்களில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
சாத்தூர் ரயில் நிலையத்தில் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு செய்தனர். அப்போது பெண்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்து, அதன் பயன்பாடு குறித்து சாத்தூர் நகர் காவல் நிலைய பெண் காவலர் சுப்புலட்சுமி செயல்முறை விளக்கம் அளித்தார்.