கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழப்பயிர்கள் நடவு செய்ய முடிவு
விருதுநகர், ஆக.4: கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயன்தரும் 14 வகையான வறண்ட நில பழப்பயிர்களை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைந்து மாவட்டத்தில் வறட்சியை தாங்கும் வறண்ட நில பழப்பயிர்களை நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வை கலெக்டர் சுகபுத்ரா தொடங்கி வைத்தார்.
கலெக்டர் கூறுகையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பருவமழைக்கு முன்பாக அதிக அளவிலான இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த பழப்பயிர்களான சீத்தா, நாவல், நெல்லி, மாதுளை, சப்போட்டா, விருசம்பழம், களாக்காய், பால்சா, மல்பெரி, வன்னிமரம், விலாம்பழம், வில்வம், முள்சீத்தா, மேற்கு இந்திய செர்ரி ஆகிய 14 வகையான வறண்ட நிலப் பழப்பயிர்கள் நடவு செய்யப்பட உள்ளன.
பருவமழை தொடங்கிய உடன் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் பழப்பயிர்கள் நடவு செய்யப்பட உள்ளன.அதிக வருமானம் தரும், வறட்சியை தாங்கி வளரும், மாவட்டத்திற்கு ஏற்ற பழப்பயிர்களை விவசாயிகள் தங்களது நிலங்களிலும் நடவு செய்து கூடுதல் வருமானம் பெறலாம் என தெரிவித்தார். தோட்டக்கலை துணை இயக்குர் சுபாவாசுகி, இணைப்பேராசிரியர் பாலசுப்பிரமணியன், விவசாயிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.