வீடியோ காலில் பேசியபடியே செல்போன் கடையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
விருத்தாசலம், செப். 22: விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் தர்ஷினி(18). இவர் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலை கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் கடை ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அந்த வாலிபர் தர்ஷனிடம் செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக வீடியோ காலில் பேசிக்கொண்டே கடையின் பின்புறமாக சென்ற தர்ஷினி, அங்கு உள்ள ஒரு அறையில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை வீடியோ காலில் பார்த்துக் கொண்டே இருந்த அந்த வாலிபர் உடனடியாக கடையில் இருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து கடையில் இருந்த ஊழியர்கள் ஓடிச் சென்று அந்த அறையில் பார்த்தபோது தர்ஷினி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். பின்னர் இது குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு விருத்தாசலம் போலீசார் சென்று தர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து தர்ஷினி ஏன் இறந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் தீயாக பரவியதால், அருகில் விருத்தாசலம் பேருந்து நிலையம் இருந்ததால் அனைத்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேடிக்கை பார்க்க குவிந்தனர்.