கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போலீசார் வழக்குப்பதிவு
கள்ளக்குறிச்சி, ஆக. 20: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் அரவிந்த் (24). இவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி மண்மலை கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மகளிர் ஊர் நல அலுவலர் செல்வி சம்மந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்ததில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததும், தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மகளிர் ஊர் நல அலுவலர் செல்வி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த அரவிந்த் மற்றும் இந்த திருமணத்துக்கு உடந்தையாக இருந்த அரவிந்த்தின் தந்தை வேலாயுதம், தாய் பச்சையம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய 4 பேர் மீதும் உதவி ஆய்வாளர் மணிமேகலை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.