வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை
மரக்காணம், நவ. 18: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதுபோல் பெய்து வரும் மிதமான மழையால் இப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், ஓடைகள் உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகள் வெகுவாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் வங்கக்கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அலைகளின்ல் சீற்றமும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்படும். இதனால் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள 19 கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது பைபர் படகு, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கடற்கரையோரமிருந்து மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.