சென்னையிலிருந்து சிதம்பரம் வந்த குளிர்சாதன பஸ்சுக்கு உள்ளே ஒழுகும் மழையினால் பயணிகள் கடும் அவதி
சிதம்பரம், அக். 18: சிதம்பரத்திற்கு சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு குளிர்சாதன அரசு பேருந்தில் மழை உள் பகுதியில் கொட்டியதால் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் நோக்கி விழுப்புரம் பணிமனைக்கு சொந்தமான குளிர்சாதன அரசு பேருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த பேருந்து கடலூர் அருகே வந்தபோது திடீரென மழை பெய்துள்ளது. இதில் பேருந்தில் ஓட்டை இருந்ததால் அதன் வழியாக மழை நீர் பேருந்தின் உள்ேள சொட்டியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மழையில் நனைந்தபடி அவதிப்பட்டனர். இதனால் அவதிக்குள்ளான பயணிகள் அமர முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இந்த பேருந்தில் முன்பதிவு செய்து, சிதம்பரம் வந்த அருண்குமார் என்பவர் குளிர்சாதன பேருந்துக்குள் மழை கொட்டியதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். எனவே அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து பொதுமக்கள் பயணிக்கும் வகையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.