நாகப்பட்டினத்தில் காணாமல் போனவர் புதுவை வாலிபர், இளம்பெண் 2 குழந்தைகள் கொலை
திருமலை, செப். 17: திருப்பதி வனப்பகுதியில் 2 குழந்தைகளுடன் இளம்பெண், அவரது அண்ணன் ஆகியோர் மர்மமான முறையில் இறந்தது குறித்து பெண்ணின் கணவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பாகாலா மண்டலத்தின் முலவங்கவில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த 14ம் தேதி ஒரு ஆண் சடலம் மரத்தில் தூக்கிட்டது போலும், ஒரு பெண் சடலம் துணியில் மூடிய நிலையிலும் இருந்தது. இதை பார்த்த அங்கு கால்நடை மேய்க்க சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலங்கள் இருந்த இடத்திற்கு அருகில் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததையும் அதன் அருகில் ஒரு மண் வெட்டியையும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனையில் தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் மனநல மருத்துவமனையில் கலை செல்வன் என்பவர் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ ரெக்கார்ட் மற்றும் சிம்கார்ட் இல்லாத செல்போன், மதுபாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
அந்த செல்போன் ஆதாரமாக இறந்த கலைசெல்வன் போட்டோவை சேகரித்த போலீசார் தஞ்சாவூர் போலீசாருக்கு அங்குள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ ரெக்கார்ட் மற்றும் போட்டோ ஆதாரமாக விசாரித்தனர். மேலும் காணாமல் போனவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதில் இறந்த கலைச்செல்வன்(37) புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் இறந்த நிலையில் கிடந்த சடலங்கள் அவரது உறவினர்களான நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி ஜெயமாலினி(32), அவரது மகள்கள் ஹர்ஷினி(7), தர்ஷினி(3) என்பதும் தெரிய வந்தது.
மேலும் வெங்கடேசன் குவைத்தில் பணி புரிந்ததாகவும், கடந்த ஜூலை மாதம் தனது மனைவி, பிள்ளைகளுக்கு தொடர்ந்து போன் செய்தபோதிலும் அவர்களின் தொடர்பு கிடைக்காததால் இந்தியாவிற்கு திரும்ப வந்துபார்த்துள்ளார். அப்போது மனைவி, குழந்தைகள் காணாமல் போனது தெரியவந்தது. உடனே வெங்கடேசன் திட்டச்சேரி காவல் நிலையத்தில் மனைவி, குழந்தைகள் காணவில்லை என புகார் அளித்திருந்தது தெரிய வந்தது. ஆனால் காணவில்லை என புகார் அளித்த வெங்கடேசன் அதன் பிறகு மீண்டும் வரவில்லை என்பதால் இறந்த இடத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கலைச்செல்வன் போட்டோவை தஞ்சாவூர் போலீசார் உதவியுடன் வெங்கடேசனிடம் காண்பித்தனர். அப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகள் கலைசெல்வனுடன் நெருக்கமாக இருந்ததாக கூறினார்.
இதனையடுத்து போலீசார் வெங்கடேசனை திருப்பதி அழைத்து வந்து சடலத்தை கண்டுபிடித்த இடத்திற்கு அழைத்து சென்று சடலத்தை அடையாளம் காண்பித்து அது அவரது மனைவி குழந்தைகள் கலைச்செல்வன் என்பதை உறுதி செய்தனர். கலைச்செல்வன் மற்றும் ஜெயமாலினி இருவரும் அண்ணன், தங்கை உறவு முறை என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததா என்று தெரியவில்லை. இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் எப்படி திருப்பதிக்கு வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டார்களா? அல்லது எப்படி இறந்தனர் என்று தெரியவில்லை. இந்த 4 பேரின் மர்ம சாவு குறித்து போலீசார் ஜெயமாலினியின் கணவன் வெங்கடேசனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.