7 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி
புதுச்சேரி, அக். 13: புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு, மர்ம நபர் ஒருவர் செயலி ஒன்றை அனுப்பியுள்ளார். அப்பெண்ணும், செயலியை அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.80 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது.
சண்முகாபுரத்தை சேர்ந்த ஆண் நபர், முகநூலில் பழைய நாணயத்துக்கு தகுந்த பணம் தருவதாக கூறிய விளம்பர ஒன்றை பார்த்துள்ளார். இதனை உண்மை என நம்பி நபர், மர்ம நபரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, மர்ம நபர் செயலாக்க கட்டணம் செலுத்தமாறு கூறியுள்ளார். இதையடுத்து ரூ.73 ஆயிரத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
புதுவை தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.16 ஆயிரம், முதலியார்பேட்டையை சேர்ந்த ஆண் ஒருவர் ரூ.50 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.17 ஆயிரம், மூலகுளத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.4 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ரூ.6 ஆயிரம் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.2.46 லட்சம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..