கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவு சாமியார் வேடத்தில் ஒடிசாவில் பதுங்கிய குற்றவாளி அதிரடி கைது
கடலூர், ஆக. 12: கொலை வழக்கில் ஜாமீனில் வந்து ஒடிசாவில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரை கடந்த ஜனவரி 25ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் புதுநகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி பாலாஜி ஜாமீனில் வந்தார். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய கடலூர் எஸ்பி ஜெயக்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பாலாஜியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பாலாஜி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார், ரிஷிகேஷ், கேதர்நாத் பகுதியில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்த பாலாஜி அங்கிருந்து ஒடிசா மாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு விரைந்த தனிப்படை போலீசார் ஒடிசா மாநிலம் ஜாய்ப்பூர் மலை பகுதியில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த பாலாஜியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கடலூர் அழைத்து வந்து புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 4 மாதமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஒடிசா மாநிலத்திற்கு சென்று கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.