இளம்பெண்ணை தாக்கிய கணவர் கைது
சின்னசேலம், நவ. 5: சின்னசேலம் அருகே லட்சியம் காடுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காளியாப்பிள்ளை(35). இவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த சத்யா என்பவரும் திருமணம் செய்து கொண்டு அதே ஊரில் வசித்து வந்தனர். மேலும் காளியாப்பிள்ளை நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் காளியாப்பிள்ளையும், அவரது மனைவி சத்யாவும், தீபாவளி பண்டிகையை ஒட்டி, அதே ஊரில் உள்ள சத்யாவின் அக்கா பானுப்பிரியா(33) வீட்டிற்கு வந்துள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் காளியாப்பிள்ளை டிரைவர் வேலைக்கு சென்றுவிட்டார். அதனால் சத்யா அவரது அக்கா பானுப்பிரயா வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த காளியாப்பிள்ளை கடந்த 31ந்தேதி இரவு பானுப்பிரயா வீட்டிற்கு சென்று அவரை அசிங்கமாக திட்டியதுடன், அவரது மனைவி சத்யாவையும் திட்டி கட்டையால் தாக்கி உள்ளார். இதனால் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்து பின் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பானுப்பிரியா கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் காளியாப்பிள்ளை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.