நெல்லிக்குப்பம் அருகே தொழிலாளி மர்ம சாவு
நெல்லிக்குப்பம், டிச. 3: நெல்லிக்குப்பம் வான்பாக்கம் பகுதியில், கஸ்டம்ஸ் சாலை செல்லும் வழியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகில் வயல்வெளியில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் (பொ) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கடலூர் டிஎஸ்பி தமிழ் இனியன் ஆகியோர் வந்து இறந்து கிடந்தவர் எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார், எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு நடுத்தெருவை சேர்ந்த பெரியநாயகம் மகன் ஜான் பீட்டர்(32) என தெரியவந்தது.
கூலி வேலை செய்து வந்த இவர், நண்பர்களுடன் வந்து புதுச்சேரி மாநிலம் மணமேடு பகுதியில் மது அருந்திவிட்டு செல்வது வழக்கமாம். இந்நிலையில் கடந்த 30ம் தேதி காலை ஜான் பீட்டர் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் வயல்வெளியில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜான் பீட்டரின் உடலை நெல்லிக்குப்பம் போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜான் பீட்டர் அண்ணன் சேவியர் புகார் அளித்தார். அதில், தனது தம்பி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.