விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் எம்பி மீதான அவதூறு வழக்கு விசாரணை 29ம்தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம், ஆக. 2: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் கடந்த 10.3.2023 அன்றும், கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் 1.5.2023 அன்றும் அ.தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய கட்சியின் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்பி தமிழக அரசையும், முதலமைச்சரையும் அவதூறாகவும், அவரது புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம், தனித்தனியாக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த இரு வழக்குகளும் நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. அவர் சார்பில் அதிமுக வழக்கறிஞர்கள் ராதிகாசெந்தில், தமிழரசன் ஆகியோர் ஆஜராகி சி.வி.சண்முகம் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இம்மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைக்க மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி மணிமொழி வரும் 29ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.