கட்டிட மேஸ்திரி குடும்பத்திற்கு ரூ.15.15 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் உத்தரவு லோடு ஆட்டோ மீது மோதி உயிரிழந்த
வேலூர், அக்.29: லோடு ஆட்டோ மீது மோதி உயிரிழந்த கட்டிட மேஸ்திரி குடும்பத்திற்கு ரூ.15.15 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலுார் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கிழச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (23), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் காட்பாடி-குடியாத்தம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொசவன்புதூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக காளிதாஸ் பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் தனது கணவர் இறப்புக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது மனைவி தீபா, வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி சாண்டில்யன் முன்னிலையில் நடந்தது. அதில், மனுதாரரின் கணவர் இறப்புக்கு லோடு ஆட்டோவை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.15.15 லட்சமும், ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், லோடு ஆட்டோ உரிமையாளரும், இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.