தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, மகன் ரயிலில் சிக்கி உடல் நசுங்கி பலி திருவாரூரை சேர்ந்தவர்கள் காட்பாடி அருகே
வேலூர், அக்.28: காட்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற திருவாரூரை சேர்ந்த தந்தை, மகன் ரயிலில் சிக்கி உடல்நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(40). இவரது மனைவி சாந்தி. தம்பதிகளுக்கு கிஷோர்(18) உட்பட 4 குழந்தைகள். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதிக்கு வந்தார். திருவலம் அடுத்த காமராஜபுரத்தில் ஓட்டல் வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிஷோர்(18), தந்தை ராஜேஷுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு கிஷோர் வீட்டில் இருந்து வெளியே சென்றாராம். அவரை திரும்ப வீட்டிற்கு அழைத்து வந்தபோது ராஜேஷ், கிஷோர் இருவரும் திருவலம்- முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.