வேலூரில் 71 மி.மீ மழை கொட்டி தீர்த்த கனமழை வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி மாவட்டத்தில் அதிகபட்சமாக
வேலூர், அக்.23: வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வேலூரில் 71 மி.மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதலே லேசான சாரல் மழை பெய்தது. பின்னர், 12.30 மணியளவில் வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி, திருவலம், அணைக்கட்டு, குடியாத்தம், ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவு முதல் காலை வரை விடிய விடிய இரவு வரை விட்டு, விட்டு பெய்த பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது. முள்ளிப்பாளையம், சேண்பாக்கம், தொரப்பாடி, அரியூர் போன்ற இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வேலூர் சதுப்பேரி செல்லும் சாலையில் ஆர்.என்.பாளையம் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்த பகுதிகளில் கமிஷனர் லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.
வேலூர் அடுத்த அமிர்தி நாகநதி ஆற்றில் ஏற்றப்பட்டுள்ள வெள்ளபெருக்கு காரணமாக அங்குள்ள தரைபாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேலூர் தாலுகா அலுவலகத்தில் 71 மி.மீ மழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 475.40 மி.மீ. சராசரி மழை அளவு 39.62 மி.மீ ஆகும். மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்: ஒடுகத்தூர்- 18, குடியாத்தம் 37.40, மேலாலத்தூர் 45.80, மோர்தனா 17, ராஜாதோப்பு 22, வடவிரிஞ்சிபுரம் 56.80, காட்பாடி 35.20, பொன்னை 25.60, திருவலம் 48.60, பேர்ணாம்பட்டு 44.20, சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் 53.60 மி.மீ பெய்துள்ளது.