விவசாய நிலத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் தென்னை செடிகள் சேதம் பேரணாம்பட்டு அருகே பட்டப்பகலில்
பேரணாம்பட்டு, ஆக.19: பேரணாம்பட்டு அருகே பட்டப்பகலில் விவசாய நிலத்தில் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம் செய்து, தென்னை செடிகளை முறித்து சேதப்படுத்தியது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கல், அரவட்லா, கோட்டையூர், எருக்கம்பட்டு, குண்டலப்பல்லி, ரங்காம்பேட்டை, கோக்கலூர், ஜெங்கமூர், முத்துக்கூர், டிடி மோட்டூர், கொண்டமல்லி, பத்தலபல்லி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்குள்ள வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது அங்குள்ள விவசாய நிலங்கள், கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பட்டப்பகலிலேயே பாத்தபாளையாம் கிராமத்தை சேர்ந்த ரமிலா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒற்றை காட்டு யானை புகுந்து அங்கு நட்டு வைத்திருந்த தென்னை செடிகளை பிடுங்கி சாப்பிட்டு சேதப்படுத்திக்கொண்டிருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி ரமிலா இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். யானைகள் இரவு நேரங்களில் மட்டுமே விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வந்தது. தற்போது பட்டப்பகலிலேயே காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளும் அப்பகுதி மக்களும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பேரணாம்பட்டு வனத்துறையினர் யானைகள் விவசாய நிலத்திற்குள் புகாதவாறு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.