போலி பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் பறிமுதல் காட்பாடி அருகே சோதனை சாவடியில் அதிரடி ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கிய
வேலூர், செப்.14: ஆந்திராவில் இருந்து தினமும் திருவண்ணாமலைக்கு இயங்கிய தமிழ்நாடு போலி பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்சை காட்பாடி சோதனை சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் அண்டை மாநில ஆம்னி பஸ்களில் போலியாக தமிழ்நாடு பதிவெண் பயன்படுத்தி ஏராளமான பஸ்கள் இயக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. புகாரின்பேரில் போக்குவரத்து ஆணையர் கெஜலட்சுமி, மற்றும் துணை ஆணையர் பாட்டப்பசாமி ஆகியோர் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனை சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் தலைமையில் ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆம்னி பஸ்சை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அதில் ஆம்னி பஸ்சில் இருந்த நம்பரும், பதிவெண் சான்றிதழில் இருந்த நம்பரும் வேறுபட்டு இருந்தது. பதிவெண்ணை சோதனையிட்டபோது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தது என தெரியவந்தது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஒருவர் பஸ்ஸை விலைக்கு வாங்கி போலியாக தமிழக பதிவெண் ஸ்டிக்கர் ஒட்டி கடந்த 3 ஆண்டுகளாக தினமும் ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்கு பயணிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. போலியாக தமிழக பதிவெண் பயன்படுத்தி பஸ்ஸை இயக்கியதால் மாதத்திற்கு ரூ.3 லட்சம் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது. எனவே, போலி பதிவெண் கொண்ட பஸ்ஸை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பஸ்சின் உரிமையாளர் யார் என கண்டறிந்து அவருக்கு 100 சதவீத வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும், இதேபோல் தமிழகத்தில் ஏராளமான போலி பதிவெண் கொண்ட பஸ்கள் இயக்கப்படுவதால் இனி அனைத்து ஆம்னி பஸ்களும் சோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.