ரூ.50 லட்சம் நிதி திரட்டி உயிரிழந்த 10 போலீசாரின் குடும்பத்துக்கு உதவி 1993ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர்கள் ஏற்பாடு தமிழகம் முழுவதும்
வேலூர், நவ.13: கடந்த 1993ம் ஆண்டு பேட்சை சேர்ந்த போலீசார் தமிழகம் முழுவதும் ரூ.50 லட்சம் நிதி திரட்டி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர். வேலூர் ஓட்டேரியை சேர்ந்தவர் கணேஷ்பாபு(56). இவர் திருப்பத்துார் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். இவருக்கு ஜமுனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் கடந்த 1993ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். அந்த ஆண்டின் பிரிவில் மொத்தம் 5,000 பேர் போலீஸ் பணியில் சேர்ந்தனர். இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த 1993ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த போலீசாரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க, அதேபிரிவைச் சேர்ந்த போலீசார் முடிவு செய்து மொத்தம் ரூ.50 லட்சம் ரூபாய் நிதி திரண்டது. அந்த நிதியை தமிழகம் முழுவதும் பணியின் போது உயிரிழந்த 10 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்தனர். அதன்படி கணேஷ்பாபுவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்தை, அதே ஆண்டு பிரிவைச் சேர்ந்த வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார், கணேஷ்பாபுவின் இல்லத்தில் அவரது மனைவியிடம் நேற்று வழங்கினர். அப்போது இன்ஸ்பெக்டர் காண்டீபன் உட்பட 20க்கும் மேற்பட்ட அதே பிரிவைச் சேர்ந்த போலீசார் உடன் இருந்தனர்.