பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் 167 மனுக்கள் ஏற்பு அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில் 6 தாலுகாவில்
வேலூர், அக். 12: பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 2வது சனிக்கிழமையான நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.
அதன்படி, வேலூர் தாலுகா கம்பசமுத்திரம், அணைக்கட்டு தாலுகா வரதலம்பட்டு, காட்பாடி தாலுகா மகிமண்டலம், குடியாத்தம் தாலுகா போஜனாபுரம், கே.வி.குப்பம் தாலுகா தொண்டான்துளசி, பேரணாம்பட்டு தாலுகா அழிஞ்சிகுப்பம் ஆகிய கிராமங்களில் நேற்று சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது. இந்த சிறப்பு முகாம்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரிமாற்றம் செய்ய, குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல், செல்போன் எண் மாற்றம், பதிவு செய்ய, புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை உள்ளிட்ட ரேஷன் கார்டு சம்பந்தபட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் 167மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.