நிரம்பி கோடி போன நாராயணபுரம் ஏரி பூக்கள் தூவி மக்கள் வரவேற்பு அணைக்கட்டு அருகே தொடர் மழையால்
அணைக்கட்டு, அக்.10: அணைக்கட்டு அருகே தொடர் மழையால் நாராயணபுரம் ஏரி நேற்று நிரம்பி கோடி போனது. அணைக்கட்டு அடுத்த ஊனை வாணியம்பாடி ஊராட்சியில் உள்ள நாராயணபுரம் ஏரி 286 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நிரம்பினால் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் ஆண்டுதோறும் ஏரியின் நீர்வரத்து கால்வாகளை தூர்வாரி சீரமைத்து வருவதால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி கோடி போனது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணைக்கட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் வரதலம்பட்டி பேயாற்றில் இருந்து நீர்வரத்து கால்வாய்கள் வழியாக இந்த ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் ஏரியானது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நேற்று நிரம்பி கோடி போனது. இதையறிந்த கிராம மக்கள் ஏரியை பார்வையிட்டு பூக்கள் தூவி வரவேற்றனர்.
மேலும், ஒன்றிய திமுக செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன், துணைத்தலைவர் முரளி, ஒன்றிய கவுன்சிலர் ஆஷா ரமேஷ் ஆகியோர் ஏரியை பார்வையிட்டு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் பருவ மழை முன்னெச்சரிக்கையாக நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து வருவதால் இந்த ஏரி தொடர்ந்து நிரம்பி வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து ஏரிகளையும் பார்வையிட்டு நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து அந்த ஏரிகளும் முழுமையாக நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.