ஓடும் பஸ்சில் 4 சவரன் நகை திருட்டு
வேலூர், அக்.8: வேலூரில் ஓடும் பஸ்சில் 4 சவரன் நகை திருட்டு போனது. வேலூர் விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் முனிசாமி மனைவி மணியரசி(73). இவர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகை கடை ஒன்றில் நகை சேமிப்புத்திட்டத்தில் சேர்ந்துள்ளார். முதிர்வு காலம் முடிந்ததும், கடந்த 3ம் தேதி மாலை 5 மணியளவில், அதற்கான பணத்திற்கு 4 சவரன் தங்கச் செயினை வாங்கிக் கொண்டு அரசு டவுன் பஸ்சில் வீட்டுக்கு திரும்பினார். விருபாட்சிபுரம் பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி தனது கைப்பையை பார்த்த போது அதில் இருந்த 4 சவரன் தங்கச் செயின் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை யாரோ மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக மணியரசி கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.