தீபத்திருவிழா சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.1.05 கோடி வருவாய் அதிகாரிகள் தகவல் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு
வேலூர், டிச.7: திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் மூலம் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.1.05 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதேபோல் சித்ரா பவுர்ணமி விழாவில் திருவண்ணாமலை செல்லும் அதிகளவிலான பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும் 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 3ம் தேதி திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப விழா வெகு சிறப்பாக நடந்தது. தீபத்திருவிழா காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு பயணம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில், பஸ்கள் இயக்கப்பட்டன.
அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 100 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 70 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 60 பஸ்களும் என 230 சிறப்பு பஸ்கள் கடந்த 3, 4ம் தேதிகளில் இயக்கப்பட்டன. இதன்மூலம் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.1.05 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கியது வேலூர் போக்குவரத்து மண்டலம். இந்த மண்டலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தையொட்டி, வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 3ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 3, 4ம் தேதி 230 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.1.05 கோடி வருவாய் கிடைத்துள்ளது’ என்றனர்.