9 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் போக்சோவில் தொழிலாளி கைது குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த
குடியாத்தம், டிச.6: குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த குருராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(60), தொழிலாளி. இவர் குடியாத்தம் நகரில் தொழிலதிபர் ஒருவரது வீட்டில் கடந்த 20 நாட்களாக கதவு, ஜன்னல் செய்து வந்துள்ளார். இதற்காக வீடு வாடகைக்கு எடுத்து ஊழியர்களுடன் தங்கி வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் தொழிலதிபர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வெங்கடேஷ், அங்கு யாரும் இல்லாதபோது, தொழிலதிபரின் 9 வயது மகளிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் நடந்தது குறித்து அழுதபடி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.