இலங்கை தமிழர்களில் 120 தம்பதிகளின் திருமணங்கள் பதிவு அதிகாரிகள் தகவல் வேலூரில் நடந்த முகாமில்
வேலூர், ஜூலை 29: வேலூர் பதிவு மண்டலத்தில் நடந்த சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 120 தம்பதிகளின் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் நடைபெறும் திருமணங்கள் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, 2018 டிசம்பர் 10ம் தேதி முதல் திருமணம் செய்தோர் இணையதளம் வழியாக திருமணப் பதிவுகளை மேற்கொள்ள பதிவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக கடந்த 26ம் தேதி 7 மண்டலங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர். அதன்படி, வேலூர் பதிவு மண்டலத்தில், கடந்த 26ம் தேதி வேலூர், குடியாத்தம், வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை, செய்யாறு, கலசப்பாக்கம், களம்பூர், நெமிலி, வாலாஜா, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சார் பதிவாளர்கள் அலுவலகத்தில் 206 திருமணங்கள் பதிவு செய்ய சிறப்பு முகாமில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 120 தம்பதிகள் தங்களது திருமணங்களை பதிவு செய்துள்ளதாக பதிவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.