விபத்தில் உயிரிழந்த லோடு மேன் குடும்பத்தினருக்கு ரூ.7.14 லட்சம் இழப்பீடு: வேலூர் கோர்ட் உத்தரவு
வேலூர், செப்.2: விபத்தில் உயிரிழந்த லோடு மேன் குடும்பத்தினருக்கு ரூ.7.14 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூரை சேர்ந்தவர் மாணிக்கம் என்கிற முத்துமாணிக்கம்(45), லோடு மேன். இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திரா மாநிலம், ஜனகரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் சென்ற ஆட்டோ மாணிக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தனது தந்தை இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி மாணிக்கத்தின் 2 மகன்கள் மற்றும் மகள் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார். வழக்கு விசாரணையில் மனுதாரர்களின் தந்தை இறப்புக்கு, ஆட்டோவை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெரியவந்தது. எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக ரூ.7.14 லட்சம், ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 2010ம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.