மின்சாரம் தாக்கி வெல்டர் பரிதாப பலி
முசிறி,ஆக.22: திருச்சி அருகே வெல்டிங் செய்த போது மின்சாரம் தாக்கி வெல்டர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் தொட்டியம் கோட்டைமேடு கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கண்ணன் (45). வெல்டரான இவர், அதே பகுதியை சேர்ந்த தினேஷ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கூரை அமைப்பதற்கு வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வெல்டிங் அடித்த போது எதிர்பாராத விதமாக கண்ணன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொட்டியம் சப்.இன்ஸ்பெக்டர் வரதராஜ பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொட்டியம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.