லால்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
லால்குடி, நவ.1: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடராஜபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மணி, ஜோசியர். இவரது மனைவி லட்சுமி (53). இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்நிலையில் கடந்த 29ம் தேதி மணி தனது வீட்டின் முன்பு இருந்த வேப்ப மரத்தை வெட்டியுள்ளார். அப்போது, மரத்தின் அருகே மின்கம்பத்தில் இருந்த ஸ்டே கம்பி அருந்து விழுந்தது. ஆனால், எந்த வித மின்விபத்தும் ஏற்படவில்லை. இந்நிலையில், லெட்சுமி நேற்று 31ம் தேதி காலை வீட்டின் முன்பு சுத்தம் செய்தபோது, இடையூறாக இருந்த ஸ்டே கம்பியை கையில் எடுத்தார்.
அப்போது, மின்சாரம் பாய்ந்து அதே இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லெட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லால்குடி இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் மின் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.