நகைக்கடை தொழிலாளி வீட்டில் 10 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு சிசிடிவி கேமராக்களை போலீஸ் ஆய்வு ஆரணியில் மர்ம ஆசாமிகள் துணிகரம்
ஆரணி, அக்.30: ஆரணியில் நகைக்கடை தொழிலாளி வீட்டின் பூட்டு உடைத்து 10 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் மணி(72). ஆரணியில் உள்ள நகைக்கடையில் ஆச்சாரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. மணி, அவரது மனைவி வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்ற மணி, அவரது மனைவி காஞ்சனா இருவரும் அங்கேயே தங்கியுள்ளனர். இவரது வீட்டின் மேல்மாடியில் வசித்து வரும் அருண் என்பவர் நேற்று காலை வெளியே வந்தார். அப்போது, மணி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சென்னையில் இருக்கும் மணிக்கும், ஆரணி டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறைகளின் பூட்டுகள் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள், பொருட்கள் சிதறிக் கிடந்தது.
தொடர்ந்து, மணி மற்றும் அவரது மனைவியை வரவழைத்து விசாரணை நடத்தினர். அதில், பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும், மோப்பநாய் வீரா அழைத்து வரப்பட்டு துப்பு துலக்கினர். சிறிது தூரம் ஓடிச்சென்ற மோப்பநாய் பின்னர் நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து, மணி அளித்த புகாரின்பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.