மின்வேலியில் சிக்கி பலியான விவசாயி சடலம் கிணற்றில் வீச்சு விபத்துபோல் சித்தரித்த தந்தை, மகன் கைது செய்யாறு அருகே விவசாய நிலத்தில் அமைத்திருந்த
செய்யாறு, அக். 28: செய்யாறு அருகே நிலத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார். இதனை மறைக்க அவரது சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு விபத்துபோல் சித்தரித்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன்(85), விவசாயி. இவர் கடந்த 24ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை, அவரது மகன் குமார் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிச்சென்றனர். மறுநாள் (25ம் தேதி) மாலை பச்சையப்பன் நிலத்தின் அருகே உள்ள பழனி(60) என்பவரின் விவசாய கிணற்றில் பச்சையப்பன் சடலமாக கிடந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் கால் தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என நினைத்து போலீசாருக்கு தெரிவிக்காமல் தாங்களே சடலத்தை ஊர் மக்களுடன் சேர்ந்து வெளியே எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில் ‘பிரீசர் பாக்சில்’ வைத்தனர். முன்னதாக அவர் அணிந்திருந்த ஆடையை அகற்றிவிட்டு வேறு ஆடையை அணிவிக்க முயன்றனர். அப்போது, அவரது உடலில் பல இடங்களில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகியதற்கான அடையாளம் இருந்தது. இதனால் அதிர்ச்சியும் சந்தேகமும் அடைந்த அவரது மகன் குமார், அனக்காவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வந்த போலீசார், பச்சையப்பனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், கடந்த 24ம் தேதி விவசாய நிலத்திற்கு பச்சையப்பன் சென்றுள்ளார். அப்போது, பக்கத்து நிலத்துக்காரரான பழனி என்பவர், காட்டுப்பன்றிக்காக அவரது நிலத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி பச்சையப்பன் இறந்துள்ளார்.
இதனை மறுநாள் காலை கண்டு அதிர்ச்சி அடைந்த பழனி, அவரது மகன் மணிகண்டன்(27) ஆகியோர், தங்கள் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக, கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக சித்தரிக்க நினைத்து பச்சையப்பனின் சடலத்தை தூக்கி கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து குமார், அனக்காவூர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பழனி, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் நேற்று காலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மின்வேலியில் சிக்கி பலியான பச்சையப்பன் சடலத்தை கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மின்வேலியில் சிக்கி பலியான விவசாயி சடலம் கிணற்றில் வீசி விபத்துபோல் சித்தரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.