கடன் தொல்லையால் இறந்த விவசாயிகளுக்கு தர்ப்பணம்: செய்யாறில் நூதன ஆர்ப்பாட்டம்
செய்யாறு, செப்.22: செய்யாறு ஆற்றங்கரையில் நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்நிலையில், தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் செய்யாறு ஆற்றங்கரையில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, 1970ம் ஆண்டில் தங்கம் சவரன் விலை ரூ.150, நெல் விலை ரூ.35, அரசு ஊழியர்கள் சம்பளம் ரூ.70. ஆனால், கடந்த 55 ஆண்டுகளில் தங்கம் விலை 600 மடங்கும், அரசு ஊழியரின் சம்பளம் 1,000 மடங்கும் உயர்ந்துள்ளது. ஆனால், நெல் விலை மட்டும் 32 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. 1984 அத்தியாவசிய விலை கட்டுப்பாடு சட்டத்தால் வேளாண் விலை பொருட்கள் விலை வீழ்ச்சி அடைய, இடுபொருட்கள் விலை 400 மடங்கு வரை உயர கடன் தொல்லையால் கடந்த 20 ஆண்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
40 லட்சம் ஏக்கர் நிலங்கள் சாகுபடியில் இருந்து விடுதலை பெற்று தரிசு மற்றும் ரியல் எஸ்டேட்டாக மாறிவிட்டது. பாமாயில், பருப்பு, பால் இறக்குமதி செய்யும் நிலை ஆகிவிட்டது. எனவே, வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விவசாய பொருட்களை அரசே கொள்முதல் செய்து, ஏக்கருக்கு ரூ.20,000 பயிர் காப்பீடு நிதி வழங்க வலியுறுத்தி, தற்கொலை செய்து கொண்டு இறந்த விவசாயிகளுக்கு தர்ப்பணம் கொடுத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.